ஒருவன் ஒரு அழகான ஊரில் குடும்பத்துடன் ஆனந்தமாக வாழ்ந்து வந்தான். அந்த ஊரெங்கும் பசும்புல் தரைகள் நிறைந்திருந்தன. நதியில் தாழம் புதர்களின் வழியே நதி நீர் வழிந்தோடியது.
எந்த ஊருக்கு ஒரு நாடோடி வந்தான். அவன் காலில் தோலினால் செய்யப்பட ஒரு அழகான பாதணி அணிந்திருந்தான்.
அதைப் பார்த்ததும் இவனுக்கு அப்படி ஒரு பாதணி இருந்தால் எப்படி இருக்கும் என ஆசை வந்தது. புதியவனுக்கு தன்னுடைய ஒரு வருட விளைச்சலை கொடுத்து அவனிடம் இருந்து பாதணிகளை வாங்கிக் கொண்டான்.
சில நாட்கள் சென்றன. தன்னுடைய பாதணியை விட்டு அவன் பிரியவே இல்லை. ஆனால் விளைச்சலை முழுவதுமாக அவனிடம் கொடுத்து விட்டதால் அவன் குடும்பம் பசியில் வாடியது. இருந்தாலும் அவன் தன்னுடைய பாதணிகளை அழகு பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு வயலில் நடப்பது இப்போது எளிதாக இருந்தது. முட்கள் குத்தும் பிரச்சினை இல்லாமல் இருந்தது. அவனுக்கு இந்தப் பாதணி இல்லாமல் தான் இவ்வளவு நாள் எப்படி இருந்தோம் என எண்ணி எண்ணி வருத்தப்பட்டான்.தூங்கும் போதும் அவன் பாதணியுடனேயே தூங்கினான்.
ஆனால் அவனுக்கு ஒரு பிரச்சினை வந்தது. தூங்கும் போது அவனுடைய பாதணிகள் அவனுடைய காலில் இருந்து நழுவி விழுந்தன. அது அவனுக்கு பிடிக்கவில்லை. அப்போது அந்த ஊருக்கு திரும்ப அதே நாடோடி வந்தான். நாடோடியிடம் என்னுடைய பிரச்சினையை அவன் சொன்னான்.
நாடோடி ஒரு யோசனை சொன்னான். அதன்படி அவன் தன்னுடைய வயல், தோப்பு அனைத்தையும் அந்த நாடோடிக்கு எழுதிக் கொடுத்து விட்டு அந்த நாடோடியிடம் இருந்து நூறு பாதணிகளை வாங்கினான். அந்தப் பாதணிகளை அவன் படுக்கை முழுவதும் பரப்பி அதன் மீதி உறங்கினான்.
சில ஆண்டுகளில் அவன் குடும்பம் வறுமையில் வீழ்ந்து அழிந்தது. அவனும் அவனுடைய படுக்கையில் பாதணிகளுக்கு நடுவே பசியில் இரண்டு கிடந்தான். ஆனால் சாகும் போது கூட தன்னுடைய அழிவிற்கு இந்த பாதணி தான் காரணம் என்பதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.
நண்பர்களே நம்முடைய ஆங்கில மோகமும் அவனுடைய பாதணி மோகமும் ஒன்று தான். தொடர்பு மொழியாக கற்க வேண்டிய ஒரு மொழியை நாம் வாழ்க்கையின் ஒரே வழியாக ஏற்றோம். இன்று நம்முடைய நிலங்கள், கலைகள், வரலாறு , நதிகள் , வாழ்க்கை முறை, பண்பாடு அனைத்தையும் இழந்து நிற்கிறோம். இருந்தும் நம்முடைய வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மறுக்கிறோம்.
நாம் மீள நம்முடைய மொழியின் மீட்சி அவசியம் என்பதை இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறோம். வேலைவாய்ப்பு, உலகமயமாக்கல் என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். எப்படி தாய்மொழியில் கல்வி கற்கும் நாடுகள் சிறந்து விளங்குகின்றன என்பது கண்ணுக்கு முன்னே தெரிந்தும் நாம் நம் தாய் மொழியைப் பழிக்கின்றோம்.
தமிழர்கள் வாழ்வதும் வீழ்வதும் தமிழின் கைகளில் இருக்கிறதே அன்றி வேறு எதனின் கையிலும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக